
சிரியாவின் பூக்களையெடுத்து
எந்த மகளிருக்கு
வாழ்த்துச் சொல்லி கொடுப்பேன்?
இன்னமும்
வீடுகளில் சுழலும் ரோபோக்களுக்கு
வாழ்த்துகள் என்பதே
என்னவென்றுத் தெரியாது...
பப்புகளில்
விழுந்து கிடக்கும் வாழ்த்துகளை
யார் அள்ளிச் செல்வது?
மௌனம் பூத்த பூக்களிடம்
வாழ்த்துகள் சொல்லிப் பாருங்கள்
சிரிக்கத்தான் செய்யும்...
எச்சில் மலர்களை அழைத்து வந்து
வாழ்த்துகள் சொன்னால்
ஏற்றுக் கொள்வீர்களா?
பசியாறும் காமத்திற்கு
கண்களில் பூப்பதை காதல் என்கிறான்
அந்த வாழ்த்து பூக்களில்
எச்சிலல்லவா ஒட்டியிருக்கிறது...
இரண்டாம் பாலினம்
கையேந்தி நிற்கிறது ஒற்றை பூவிற்காக
வாழ்த்துகளுண்டா?
ஆடை குறைந்த சுதந்திரத்திற்கு
ஆயிரம் வாழ்த்துகள் குவிகிறது
உண்மையான சுதந்திரம்
உறங்கிக் கிடக்க
யாருக்கு நான் வாழ்த்து சொல்வது?
- மு.முகமது பாட்சா*
08 /03 /2018
No comments:
Post a Comment