
சொற்கூட்டங்கள் அவனை
சூழ்ந்து கொள்கின்றன
மரணத்தின் வலி கடனென்பது
அவனது அடிவயிற்றில் எழுதப்படுகிறது
ஒரு மரத்தின் சுதந்திரம் விரைவில்
அவனால் அழிக்கப் படலாம்
அல்லது
ஒரு விடத்தின் குடுவையில்
அவன் பெயர் எழுதப்பட்டிருக்கலாம்...
பயம் அவனை
போர்வைக்குள்ளாற பொத்தி வைக்கிறது
தேநீர் குவளையின் கசப்புச் சுவை மட்டுமே
அவன் நாவில் ஒட்டியிருக்கிறது
முகமூடியும்
புன்னகைப்பதை மறந்துவிட்டது,
இரவை நேசிக்கும் மனம்
விடியலை நரகமென்று கற்பிக்கிறது
புழுவைச் சீரணிக்காத மீன்கள்
சட்டியில் வேகுகின்றன
நாளை அவன் போகும் பாதையில்
பூக்களோடு பயமும் இரைந்திருக்க
கடன் மட்டும் ஒரு மூலையில் நின்று
வேடிக்கை பார்க்கும்.
- மு.முகமது பாட்சா*
26 /03 /2018
No comments:
Post a Comment