
அந்தச் சிலை
சிலையாகவே இருந்தது
அதற்கு உயிர் இருப்பதாகவே
அவன் பார்த்துக் கொண்டு
நின்றிருந்தான்...
சிலையை வடித்த ஸ்தபதி
கடவுளுக்கும் சிலை வடித்திருப்பான்
ஆனாலும் சிலையின் கீழ்
கடவுள் இல்லையென்றுதான்
எழுதியிருந்தது...
பகுத்தறிவு என்றால்
என்னவென்று கேட்ட மகளிடம்
இதுதான் என்று
சிலையைக் காட்டினான் அப்பன்,
இப்போது சிலையை
அவன் உற்று நோக்கினான்
அதன் கண்கள்
அவனையே பார்த்துக் கொண்டிருந்தது
ஒரு நூற்றாண்டு கிழவனுக்கு
ஏன் இத்தினை சிலைகள்?
தடவிப் பார்த்த சட்டைப் பையில்
உடைப்புக் கூலி உட்கார்ந்திருந்தது
தடியை மெல்ல அசைத்தான்
சிலை சற்று சாய்ந்து
அவனையே பார்த்தது...
அதன் கண்ணாடியை பிடுங்கினான்
அவன் முதுகில்
ஓங்கி ஓர் அடி விழுந்தது
அடித்தவனும்
தாடியோடு கண்ணாடி அணிந்திருந்தான்
'இப்படி உடைப்பதற்கும்
உரிமையை வாங்கித் தந்தவன்
இந்தக் கிழவன்தான்
நீ போட்டிருக்கும் இந்தச் சட்டை
நான் வாங்கித் தந்ததல்ல
இந்தக் கிழவன் வாங்கித் தந்தது '
அவன் இப்போதுதான் பார்க்கிறான்
அவர் பெரியாரென்று.
- மு.முகமது பாட்சா*
07 /03 /2018
No comments:
Post a Comment