
அலைப்பேசியின் கோபுரத்தில்
உட்கார்ந்திருக்கிறது நிலா
ஆந்தையின் கண்கள்
மிரட்சியுடன் பார்க்கின்றன
சட்டைக் கிழிந்த யாசகன்
என்னைத் தொட்டுவிட்டு சிரிக்கிறான்
கனகாம்பரம் சூடியவள்
கிராக்கி படிய வேண்டிக் கொள்கிறாள்
சல்லாபம் செய்யும் நடைவாசிகளுக்கு
வீடுகள் இல்லை
ஒரு நாய் அழுகிறது
பூனை நடையோடு ஒருவன் பதுங்குகிறான்
அசதியிலுறங்கும் முலையில்
அழுக்கான குழந்தை பால் குடிக்கிறது
கோவில் நடை சாத்தப் பட்டிருக்கிறது
தெருவோரத்து சாமி
காவல் காத்துக் கொண்டிருக்கிறார்
டாணாக்காரரின் விசில்
களவாணிகளை உஷார் செய்கிறது...
மாடியில் எரியும் வீட்டில்
வயசுக்காரி சோரம் போயிருக்கலாம்
வாகனங்கள் எதையும் அறியாமல்
வேகமாகவே கடக்கின்றன
அவள் மட்டும் இன்னமும் வரவில்லை
விடிந்தால்தான் தெரியும்
என் பிணம் எங்கே ஒதுங்குகிறதென்று.
- மு.முகமது பாட்சா*
23/03/2018
No comments:
Post a Comment