
தண்ணீரில்லாத நதியில்
நடந்து போகிறோம்
வெப்பக் காற்றில் நாணற் புற்கள்
எரிந்து கொண்டிருக்கின்றன
யானைகளின் வழித் தடத்தில்
எலும்புகள் மட்டுமே மிச்சமாய் கிடக்கிறது
நதி சாகவில்லையென்று சொல்லி
சிலர் மணலெடுத்துப் போகிறார்கள்
இதில் எண்ணெய் ஆறு ஓடுமென்று
ஒருவன் துளையிடுகிறான்...
நகரத்தின் விரிவாக்கம்
நதிகளின் மேல் எழுந்தால்தான்
நதிக்கரை நாகரீகமென்று
வரலாறு எழுதப்படுகிறது .
பரந்த கடவுளுக்கும் இங்கு
அகன்ற சிலை வைப்போம் தண்ணீர்
தாராளமாக வருமென்று மகரிஷி சொல்கிறார்
தண்ணீர் கேட்பவர்களுக்கு
பாலிடால் இலவசமாக தரப் படுகிறது
வெடித்த மார்புகளுடன்
நதி அழுது கொண்டிருக்கிறாள் தீர்வை
பெருத்த மார்புகளில்
தேடிக் கொண்டிருக்கிறான் அரசியல்வியாதி
தாயை மட்டுமல்ல இனி
நதியைப் பழித்தாலும் நாக்கை வெட்டுங்கள்
நதியின் மகனாய் இருப்பதைவிட
இந்தியனாக இருப்பது
அத்துணியொன்றும் பெருமையில்லை.
- மு.முகமது பாட்சா*
30 /03 /2018
No comments:
Post a Comment