
அவள் காதில் சொன்ன இரகசியம்
அடி வயிற்றில்
ரோசாப்பூவாய் மலர்ந்தது
முத்தம் கொடுத்தபோது
வயிற்றை
இடிக்காமல் பார்த்துக் கொண்டான்
காதில் கர்ப்பத்தை வாங்கி
நெஞ்சில் கருவறை சமைத்தான்
வயிற்றில் கொடுத்த முத்தம்
தொப்புள் கொடியேறி
குழந்தையின் சுவாசத்தை சிலிர்த்தது
பார்த்து நடவென்று
அடிக்கடி பதறிப் போனான்
அவளின் வயிறு பருக்க பருக்க
இவன் மூச்சு வாங்கினான்
உந்திக் கொடி வழியே
கதைகள் சொல்லத் தொடங்கியவன்
குறைவாகச் சாப்பிட்டால்
குழந்தைக்கும் பசிக்குமென கண்டித்தான்
வயிறு வலிக்குது மாமா என்றபோது
அவன் வயிறும் கூட வலித்தது
கண்ணீர் விட்டழுதான்
அவள் சுகப் பிரசவத்தில்
கண்மூடிக் கிடந்தாள்
தன் வயிற்றின் பாரம் இறக்கி
இரண்டு குழந்தைகளையும்
இப்போது தாயாய் தரிசிக்கிறான்.
- மு.முகமது பாட்சா*
11 /03 /2018
No comments:
Post a Comment