
யாருமில்லாத தேசத்தில்
நானும், நானும் மட்டுமே இருக்கிறோம்,
எனக்கும் நானுக்கும்
எப்போதுமே ஐந்தாம் பொருத்தம்
ஆனாலும்
நானில்லாமல் நான் இருந்ததில்லை
நானும் அவனில்லாமல்
எப்போதும் இருப்பதில்லை,
என் முதல் யோசனையை
அவன்தான் எனக்கு எடுத்துச் சொன்னான்,
என் முதல் கனவை
அவனிடம் மட்டுமே பகிர்ந்து கொண்டேன்,
என் முதல் மீசையை
அவன்தான் அடையாளம் காட்டினான்,
என் முதல் காதலை
அவனிடம் மட்டுமே நானும் சொன்னேன்,
சில நேரங்களில் நான்
என்னைக் குழியில் தள்ளிவிட்டுச் சிரிப்பான்,
என் சிராய்ப்புகளைத் தடவிக் கொடுத்து
என்னோடு சேர்ந்தும் அழுவான்,
பல நேரங்களில் அவனுக்கும் எனக்குமான
பிணக்குகள் பிடித்துப் போகும்,
அப்போதெல்லாம் புத்தன் போல்
போதி மரத்தின் கீழ் உட்கார்ந்து கொள்வான்,
அரிதான நேரங்களில்
அரிதாரம் பூசியென்னை அரக்கனாக்கி விடுவான்,
அவனைக் கழற்றிவிடப் பார்த்தாலும்,
என் நிழல் கூடவே வந்து படுத்துக் கொள்வான்,
பாவப்பட்டு நானும் சேர்த்துக் கொள்வேன்,
என்ன செய்வது?
நானில்லாமல் போனால்
இனி நானும் இருக்கப் போவதில்லைதானே
- மு.முகமதுபாட்சா*
28/03/2017
No comments:
Post a Comment