
ஒவ்வொரு விடியலிலும்
இரவு துப்பிப் போட்ட மிச்சமாய் வந்து விழுகிறேன்,
என் தலையினில்
போதிமரம் துளிர்விட்டுக் கிளை பரப்புகிறது,
பகல், இரவை வேசமென்றும்
இரவு, பகலை வேசமென்றும்
சொல்லிச் சொல்லி என்னை வளர்க்கின்றன,
நான் மட்டும்தான் அப்படியா?
நடந்து போகும் பாதை முழுவதும்
புத்தர்கள் ஆக்கிரமித்திருக்கிறார்கள்,
ராமர்கள் சீதைகளோடு நடந்து போகிறார்கள்,
அனுசுயாக்கள் விடியலுக்கான வெளிச்சம் கேட்டு
நளாயினிகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,
மெல்ல மெல்ல இருள் கவ்வும் வேளையில்
எங்களின் முகங்களின் கீறல்களால் தோல் உறிகிறது,
புத்தர்கள் ஆயுதமெடுத்து கீறிக்கொள்கிறார்கள்,
ராவணர்கள் சீதையைக் கடத்த ஆயத்தமாக
நளாயினிகள் பப்புகளுக்குள் பதுங்கிக் கொள்கிறார்கள்.
ஒவ்வொரு முகத்திலும் ஒருபசி வெறியூட்ட
இரவு எங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது !
ஒவ்வொரு விடியலிலும்
இரவு துப்பிப் போட்ட மிச்சமாய் வந்து விழுகிறேன்...
- மு.முகமதுபாட்சா*
08/03/2018
No comments:
Post a Comment