
மனுஷி மனுஷரோடு பயணிக்கா வாழ்க்கை
அந்தரத்தில் தொங்குகிறது
ஒரு சொல்லுக்குள் ஒளிந்து கொள்வதும்
வெளியேறுவதும்
எப்போதும் நடந்து விடுகிறது
நெஞ்சை நிமிர்த்திய தலையில் நானும்
குனித்தவன் தலையில் நீங்களும்
உட்கார்ந்து கொள்கிறார்கள்
காட்டுவேலியின் காகிதப் பூவிற்கும்
கவிதையில் வாசம் இருக்கத்தான் செய்கிறது
என் மதம் உன் மதம் என்பவன்
எந்த மதமென்றே தெரியாமல் அலைகிறான்
எண்ணிக்கையில்
உட்கார்ந்து கொள்கிறது அரசியலின் நேர்மை
ஒற்றையெழுத்தினில் கவிதையார்த்தவன்
நீள்கவிதையில் உறங்கிக் கொண்டிருக்கிறான்
சொற்களைப் பூட்டி வைத்துவிட்டு
சுதந்திரம் என்கிறார்கள்
கெட்ட வார்த்தைகள் காற்றில் உலாவுவதை
யார் தடுக்க முடியும் ?
வழிப்பாட்டுத் தளங்களுக்கும்
பூட்டுகள்தான் பாதுகாப்பாக இருக்கின்றன
ஆதியைத் தொலைத்தவர்கள்
நாடோடிப் பாடல்களை அதிகம் கேட்கிறார்கள்
இதுவும்கூட ஒரு தேசாந்திரியின் பாடல்தான்
அதனால்தான் ஆங்காங்கே கிழிந்து தொங்குகிறது
மேடைகளில் நீங்கள் கேட்க முடியாது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment