
கவிதையொன்று தர்க்கம் செய்கிறது,
சொற்களின் விளிம்பில்
கூர்மையில்லை என்று குறை பாடு,
மங்கலான எழுத்துகளுக்குள்
மறைத்து விட்டதாய் குற்றம் சாட்டுகிறது,
ஆயுத எழுத்துகளின் அழுத்தத்தைத் தராமல்
மெல்லினத்தில் பதுங்கிக் கொள்கிறேனாம்,
கல்லறைச் சென்ற
காகிதங்களின் வார்த்தைகள் கூட
தன்னிடம் இல்லையென்று
கோபம் காட்டுகிறது ,
போதி மரக் காற்றுக்குள் சுகம் காண்பது
வாளெடுக்கத் தகுதியற்றதென்றும்,
அகிம்சை பேச தனக்கு
அரை நிர்வாணமே போதுமென்றும்
கிண்டல் செய்கிறது....
வார்த்தைகளை
கலைத்துப் போட்டு அடுக்குகிறேன்...
ஏழெட்டு புலிகள் எழுந்து போகின்றன...
வாளெடுத்தொருவன் வார்த்தைகளை வீசுகிறான்
தேசத் துரோக வழக்கில்
என்னைக் கைது செய்கிறார்கள்
ஜால்ரா கவிஞனொருவன்
சாகித்யா விருது வாங்கிக் கொண்டிருக்கிறான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment