
அவர்கள் உழைக்கவே இல்லையென்று
யார் சொன்னது
கார்ப்ரேட்டுகளிடம் பேசிக் கொண்டிருக்கிறார்கள்
அமிலமழை பொழிவதற்கு
அவர்கள் விரித்து வைத்த பாலைவனத்தில்
பயிர் செய்யாதது உங்கள் குற்றம்...
வாக்குறுதிகள் பொய்யென்று சொல்லாதீர்கள்
தெரிந்துதானே வாக்களித்தீர்கள்
மாசு சூழ் பூமியென்று எக்களிக்காதீர்கள்
மாசுகளுக்குத்தான் மரியாதை செய்தீர்கள்
அடையாளத்தைத் தொலைத்த பிறகு
அடையாளம் முக்கியம் என்பதே அவசியமில்லாதது
ஆதார் எடுத்துவிட்டீர்களா?
அடிமைகளின் கழுத்துகளில் ஆதார் அவசியம்
பொய்களுக்குக் கை தட்ட தெரிந்த உங்களுக்கு
பொறுமை இல்லாமல் போனது ஏன்?
வறுமையென்றாலும் வெளியில் சொல்லாதீர்கள்
தேசத்தின் நலன் முக்கியம்
இல்லையென்றால் இதுவும்கூட விலை போகாது
தூய்மை இந்தியா என்பது
சுத்தமாக உங்களைத் துடைப்பதற்குத்தான்
வாழ்க பாரதமென்று நெஞ்சுரத்து சொல்லுங்கள்
அதோ நம் தேசிய கொடி வானில் பறக்கிறது
- மு. முகமது பாட்சா
No comments:
Post a Comment