
சாதாரணமாகத்தான்
நுழைய விட்டோம் சாத்தானை
முதலில்
தேவதூதன் என்று சொல்லித்தான்
உள்ளே நுழைந்தான்
கையை விரித்தவுடன்
கிராமங்கள் நகரங்களாய் விரிந்தன
வனங்கள் வளங்களாய்ச் சிரித்தன
வயல்களில் வரப்புயர்ந்து
அவ்வை கிழவி நடந்து சென்றாள்
கிழவி கொடுத்த கனியை
அதியமானிடம் பிடுங்கி அவனிடம் கொடுத்தோம்
சிறுவாட்டுப் பானைகளில்
தங்கக் காசுகள் பதுங்கிக் கொண்டன...
ஆளுக்கொரு வாகனங்களில்
ஆளாய்ப் பறந்தோம்
அமெரிக்கன்கள் வீட்டு வேலைகளுக்கு
விண்ணப்பம் செய்து கொண்டிருந்தார்கள்
இலங்கையும் சீனாவும்
இந்தியாவோடு இரவில் இணைந்தது
பாகிஸ்தானை
மேப்பிலிருந்தே அழித்துவிட்டோம்
அரபு நாடுகளெல்லாம் அடிமை நாடுகளாகின
காலரைத் தூக்கி விட
சட்டையைத் தேடினோம்
அப்போதுதான் தெரிந்தது
உள்ளாடைகளும் உருவப் பட்டது
மூன்று மணி நேரப் படம் காட்டி
முழுசாக உள்ளே நுழைந்தவன்
இப்போது குட்டி சாத்தான்களுக்கு
பாடம் சொல்லிக் கொண்டிருக்கிறான்
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment