
அந்தக் கவிதை
உன்னைப் போல்தான் புரியாமலிருந்தது
வார்த்தைகளை
கலைத்துப் போட்டு வாசித்தேன்
பொருள் விளங்குமறிவு எனக்கில்லை
ஆனாலும்
அற்புதமாகத்தான் இருந்தது
சிறந்ததொரு பாடலின் கட்டமைப்பில்
மிளிர்ந்தது
உன் விரல்களின் குளுமை
அதற்குள்ளொட்டி வியாபித்தது
மூச்சுக் காற்றின் வெப்பம்
மெல்லென எட்டிப் பார்த்து இரசித்தது
உன் குரல் போல் அதற்கு நடுக்கமில்லை
உன் ஓரத் துணிச்சலின் வீரம் மட்டும்
சொற்களுக்குள் உட்கார்ந்திருந்தன
அர்த்தம் விளங்கா தாவும் வார்த்தைகள்
உன் கண்களையே நினைவில் வைத்தது
உன் கவிதையைத்தான்
மேய்ந்து கொண்டிருக்கிறேன்
என்னிதயத்தில்
பூச்செடிகள் வளர்ந்து கொண்டிருக்கின்றன
ஆமாம்
இந்தக் கவிதையின் பெயரென்ன?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment