
தமிழ்
எழுத்துகளின் கூட்டம்
இனிதாய் தொடங்கியது!
- தனித் தொரு
எழுத்தென்பதால்
ஃ - தான் தலைமை தாங்கியது!
- பார்வையாளர்களின்
வரிசையில்
பிற மொழி எழுத்துகள்!
- நெடில் எழுத்துகள்
குறிலை
குறைவாகப் பார்ப்பதாக
குற்றச் சாட்டு!
- உயிருக்கு
உயிர் கொடுக்கும் தங்களை
யாரும்
கண்டு கொள்வதில்லையாம்!
மெய் எழுத்துகளின் முனக்கம்!
- 'ங' வும் 'ஞ' வும்
ஒன்றும் புரியாமல்
'ஙே' என்று விழித்தன!
- மூன்றாவது அணியாய்
வல்லினம்,மெல்லினம்,
இடையினம்!
- 'ஷ' வும் 'ஹ' வும்
மொழி உரிமைக் கேட்டு
விண்ணப்பம்?
- ஆயுதம் பேசியது,
"புழக்கத்தில் குறைவென்றாலும்
என்றாவது
குறை சொன்னேனா?
ஒற்றுமைதான் தமிழை
வாழ வைக்கும்!
அடித்து கொண்டால்
உள்ளே நுழைய
இந்தி காத்திருக்கிறான்!
- தமிழ் ஒன்று பட்டது
-தனித்து நின்று
'ஷ' வும் 'ஹ' வும்
ஙே என்று விழித்தது!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment