Saturday, 14 October 2017

நான் இரசித்த கவிதைகள் - 79


தென்னோலைக் கிடுகு

கிடுகு க்கான பட முடிவு

உச்சித் தென்னைமரத்தில் 
பச்சை ஓலை 
படபடத்து அழகுகாட்டும். 
பழுத்துப் பழுப்பேறி 
மரத்தை விட்டுக் கழன்று 
காய்ந்து கீழே விழும். 
உருமாறிய தென்னங்கீற்று 
ஓலை மட்டையாகி, 
நீரில் நனைக்கப் பட்டு 
நடுவாலே பிரிக்கப்பட்டு 
பாதி ஓலையில் 
மீதி நாடகம் அரங்கேறும். 
ஆச்சி கைவிரலில் 
ஒரு கீற்றின் கீழே 
இன்னோரு கீற்று 
மடிக்கப்பட்டு, பிரிக்கப்பட்டு 
ஒன்றுவிட்ட கீற்றினுள் 
இன்னொரு கீற்று 
புகுந்து கொண்டு.. 
அழகான 'கிடுகு' 
அருமையாய் உருவாகும். 
கிடுகுக் கட்டுகளில் 
இருபத்தைந்து சோடி சேர்ந்து 
ஐந்து, ஆறு கட்டுக்கள்.. 
வீட்டுக்குக் கூரையாகும். 
வேலிக்கும் மறைப்பாகும். 
காய்ந்த முழு ஓலைகளைக் 
கலையாய் மூன்று, நான்கடுக்கி, 
அழகாகத் 'தட்டி' பின்னி, 
வாசலுக்குக் கதவமைப்பார். 
குடிசை வாசலுக்குத் 
'தட்டிக்' கதவு 
மழை காத்து, 
காற்றுக் காத்து 
மானம் காத்து 
குளிர் காத்து, 
'குமரையும்' காத்திருக்கும். 
பச்சை ஓலையிலே 
'பாடைக்குக்' கிடத்திட 
பச்சைக் கிடுகுத் தட்டி 
இச்சையாய்த் தயாராகும். 
கடைசி வழிப்பாதைக்கு 
அழகான பச்சோலைத் 
தோரணங்கள் 
பாதி வழி போனபின் 
மீதி வழிப் பயணம் 
தனித்துப் போக விட்ட 
கவலைக்கு யார் பொறுப்பு? 
இறைவனா? இல்லை மனிதனா?

கவிஞர் புஸ்பாகிறிஸ்ரி

No comments:

Post a Comment

Popular Posts