
நினைவுகளின் கோப்பையில்
நிரம்பி வழிகிறாய்
கனவுவெளி கட்டுடைத்து விரிகின்றது,
இரவுகளைத் தின்னும் எலிகள்
இங்கும் அங்குமாய் ஓடுகின்றன,
உடை கலைந்த மலைகளின் பெருமூச்சில்
மேகங்கள் அலை மோத,
வெடிக்காத எரிமலையின் குழம்புகள்
உக்கிரம் வாசிக்கின்றன,
குளிர் மழையின் சுவாசம்
விரல்களில் வழிந்தோடுகின்றது
இதயத்தைத் தைக்கும் தையல் காரன்
சட்டையில்லாமல் திரிகிறான்,
புயலொன்று மையம் கொண்டிருப்பதாய்
வானிலை அறிக்கை வாசிக்கப்பட,
சாகசம் பெரிதென்று
மீனவன் கடலுக்குச் செல்கிறான்
மீன்கள்
வலைகளைத் தின்று கொண்டிருக்கின்றன,
அவளிட்ட அம்புகளின் படுக்கையில்
பீஷ்மன் படுத்து கிடக்க
அலுங்காமல் போகிறாள்
இதயத்தைக் கையில் எடுத்துக் கொண்டு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment