Sunday, 3 December 2017

நான் இரசித்த கவிதைகள் - 101




இந்த அடர்நிசியில் 
ஆழ்ந்துறங்கிப்போயிருக்கும்
யாரோக்களில்
ஒரு யாரோவால் தான்
நான் தனித்துவிடப்பட்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
வெறுமனே ஒரு கவிதைப்புத்தகத்தை
புரட்டிக்கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
உணர்ச்சியற்ற பாடலொன்றை
இசைத்துக் கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
பாதி நிறமிழந்திருந்த
என் நகப்பூச்சின் மீதியையும்
அகற்றிக் கொண்டிருக்கிறேன்
அந்த யாரோவால் தான்
என் நாட்குறிப்பின் எஞ்சிய 
ஏடுகளை 
கிழித்தெடுக்கிறேன்
அந்த யாரோவால் தான்
என்னறையடைத்து 
உட்தாழிட்டுக்கொள்கிறேன்
ஒளிகசியும் விளக்கை
உடைத்தெறிகிறேன்
இரவையே வெறித்து நோகிறேன்
என்னிருத்தலை ஒரு கடுஞ்சொல்லால்
சபித்து முடிக்கிறேன்
அந்த யாரோவால் தான்
அறுபட்ட 
என் வலநாடி நரம்பு சொட்டும்
குருதி போல்
சிறுக சிறுக எனை ஒழுகி தீர்க்கிறேன்...

முகிழ் நிலா

No comments:

Post a Comment

Popular Posts