
பேச்சு வார்த்தைகளை
பொய்களுடனே தொடங்கினார்கள்...
சில சொற்கள் மழையுடனும்
சில சொற்கள் வெயிலுடனும் இணைந்தது...
சிலர் ஸ்கிரிப்டில் இல்லாததையும்
பேசிக் கொண்டேயிருந்தார்கள்...
சிலர் இசையை மீட்டுவதுபோல் இசைத்துவிட்டு
உட்கார்ந்துவிட்டார்கள்...
வார்த்தைகளைத் தேடி தேடிப் பேசியவர்கள்
அவ்வப்போது நீர் அருந்திக் கொண்டார்கள்...
மௌனத்தைப் பூசிக் கொண்டு உட்கார்ந்தவர்கள்
வியர்வையை அடிக்கடி துடைத்துக் கொண்டிருக்க...
மேடைப் பேச்சாகப் பேசியவரின் வார்த்தை
விளங்கவேயில்லை...
திறமையான வார்த்தைகள் என்றதெல்லாம்
அரிதாரம்பூசி ஒத்திகை பார்த்தது....
கூட்டம் முடிந்ததும்
தூசிகள் படிந்த அத்தினை வார்த்தைகளையும்
குப்பைக் கூடையில் அள்ளிப் போட்டவர்கள்,
பேச்சுவார்த்தை தொடரும் என்று கலைந்தார்கள்...
வார்த்தைகளுக்குத் தகுந்த வரவு
கணக்கில் வைக்கப் பட்டது....
இனியும் தொடரும் பேச்சு வார்த்தை
அந்தத் தொழிற்சாலை வரலாமா? வேண்டாமா?
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment