
ஈ வே ரா வின்
கைத் தடியைக் காணவில்லையென்று
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்,
முதலில்
செருப்புகள் இருக்கிறதாவெனப் பாருங்களென்று
ஒருவன் கூச்சலிட்டான்...
காந்தியின் கைத்தடி கூட
இப்படித்தான் காணாமல் போனதென்று
ஒருவன் வருந்தினான்
மார்க்சும் லெனினும்
உண்டியல்கள் ஏந்திக் கொண்டிருக்க...
மார்வாரிகளின்
அடகுக் கடைகள் பெருத்துவிட்டன...
வங்கிகளை மூடி விடுவார்களா?
கோட்சேவின் துப்பாக்கியில்
அதிகமான கண்கள் முளைத்திருப்பதாக
செய்தித் தாள்கள் உறுதி செய்தன
அண்ணாவின் சிலையை
யாரோ களவாடிவிட்டார்கள்....
அம்பேத்கரின் கண்ணாடியை
எல்லோரும் போட்டுக் கொண்டு திரிகிறார்கள்
பகுத்தறிவை
புத்தகம் போட்டு விற்றுக் கொண்டிருக்க
பார்சலில் வருகிறது தெய்வ பக்தி,
அமேசான் காடுகளில்
ஊசி நூல்கள் விற்றுக் கொண்டிருக்க....
அலிபாபா கொள்ளையடிக்கிறான் தேசத்தை,
எல்லாவற்றிற்கும் காரணம்
ஈ வே ரா வின்
கைத் தடியைக் காணவில்லை....
எல்லோரும் பேசிக் கொண்டார்கள்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment