
என் கவிதை
உப்புக் காற்றின் கவிச்சி மண்ணில் தேடுகிறது
வாழ்க்கையின்
உச்சத்தைத் தொலைத்தவர்களை,
அவர்களுக்காக யார்தான் அழப் போகிறார்கள்?
துடுப்புப் போட்ட தாத்தன்களின் வாழ்க்கை
கருவாடாகப் போனதால்
இதுதான் நவீனமென்றார்கள்,
வலைவீசி வருவதைப் பிடித்தால் போதும்,
கனவு பொதுவானது ,
சுறாக்களின் துள்ளல்களைப் பார்த்தவர்கள்
சுறாக்களாக ஆசைப்படுவது புனைவு.
பன்னாட்டு வலைகளின் பக்குவ பேச்சுகள்
மீனவர்களைப் பிடித்து விழுங்க,
தோட்டாக்களில் புதைவது தொடர்கதை,
வாழ்க்கையே பெருங்கடல்...
அலைகளுக்குள் வாழ்க்கை பெரும்மூச்சு.
புயல் புதிதல்ல.... வருவானா? மாட்டானா?
காத்திருக்கும் கண்ணீரின் உப்புகளை
மணலில் எப்படிப் பிரித்தெடுப்பது?
வலைகள் எப்போதும் அறுந்தே தொங்குகின்றன
வல்லரசுகளின் கனவுகளோடு
பிணங்களே பிடிமீன்களாக மாறும்போது
இராஜப் பிளவு கட்டியின் சீழ் நாற்றம்
தேசமெங்கும் விரவிக்கிடக்கிறது....
வைத்தியர்கள் மௌனமாகவே இருக்கிறார்கள்.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment