Thursday, 28 December 2017

நான் இரசித்த கவிதைகள் - 111

 படம் இதைக் கொண்டிருக்கலாம்: 1 நபர், குளோஸ் அப்

அவளும் பூவரசும். 

தோட்டத்துப் பூவரசுதான் 
அவளுக்கு எல்லாமும். 

காலையில் எழுந்ததும் ஒருமுறை 
காப்பியருந்தியதும் ஒருமுறை 
குளிக்கப் போகுமுன் ஒருமுறை 
குளித்தபின்பு ஒருமுறை யென 
அதனோடு பேசித் திரிவாளெப்போதும். 

எப்போது பூக்கும் 
எப்போது காய்க்கும் 
எல்லாம் அறிவாள் .. 
அதுவும் அறியக்கூடும் 
அவள் பூத்த தருணங்களையும் 
காய்த்த தருணங்களையும். 

இலை பறிப்பாள். சுற்றி 
கொழுக்கட்டை அவிப்பாள். 
அதன் மடியிலமர்ந்தே உண்பாள். 
காய் பறிப்பாள். சாறெடுப்பாள். 
சருமத்தில் தடவிச் சிரிப்பாள். 
கழுத்து சங்கிலியிட்ட கருப்பு 
மறையுமென்பாள். 
அம்மா அதட்டிடிலோ மரத்தடியில் 
அமர்ந்தழுவாள். 
பட்டையுடைத்துக் கடித்து 
அது இனிப்பென்பாள். 
பகல் முழுதும் அதன் பக்கத்திலிருப்பாள். 
அந்தி சாயப் பிரியவொண்ணாது 
எழுந்து வருவாள். 

நாள்தோறும் பொழுதெல்லாம் 
அவளிருப்பது பூவரசின் அடியில்தான். 

பிள்ளைவீட்டார் பெண்கேட்க 
பூவரசிடம் தான் சொல்வாள் 
மாப்பிள்ளையழகை 
பிடித்தாலும் பிடிக்காவிடினும். 
மரம் போல் நிற்கும் பூவரசு. 

வரனொன்று தகைந்த நேரம் 
யாரெனக் கேட்டாளில்லை 
வயதென்ன கேட்டாளில்லை 
குணமென்ன கேட்டாளில்லை 
தொழிலென்ன கேட்டாளில்லை 
உடன்பிறந்தாரெத்தனை.. 
மாமியார் கொடுமையுண்டா.. 
மாமனார் பரிவாவதுண்டா.. 
எதையுமே கேட்டாளில்லை... 

கேட்டதெல்லாம் ஒன்றேயொன்று 
அங்கன பூவரசமிருக்கா.. 

 சுரேஷ் பரதன்.

No comments:

Post a Comment

Popular Posts