
பிலாத்துவின் கைகளில்
திணிக்கப்பட்ட எழுதுகோல்
முள் கிரீடம் சூடியிருந்தது,
பேதுருவின் வாக்குறுதி
மூன்று முறை நழுவிச் சென்றது,
சபிக்கப் பட்ட முத்தம்
யூதாசு காரியோத்துவின்
இதழ்களிலிருந்து,
சீடர்களின் நம்பிக்கையில்
உயிர் பயம் ஒட்டிக் கொள்ள,
கயபாவின் பாடசாலை
பொய்களுக்குப் புடம் போட்டது..
அதிகாரத்தின் மாட்சிமை
அகங்காரம் சூடிக் கொள்ள
எரோதுவின் குதிரைகளும்
எத்துணைக் குழந்தைகளை
புதைத்திருக்கும்
மாட்டுத் தொழுவம்
மகிமையை ஏந்திக் கொள்கிறது
தச்சன் வீட்டில்தான்
தத்துவன் பிறக்கிறான்,
முத்தமிட்ட இதழ்களுக்கு
மீட்சிமை கிடைத்தது...
சிறு குடிலமைத்து
நட்சத்திர விளக்கேற்றி
நினைவு கூறலில் மட்டுமே
முடிந்து விடுகிறது
கிறிஸ்துவின் ஜனன தினம்!
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment