
சதுரங்கம் விளையாடும் போது
உணரவில்லை
அதுதான் என் வீடென்று...
குதிரையைப் போல் அவர்
தாவித் தாவி ஓடிக் கொண்டேயிருக்கிறார்,
என் கோரிக்கைகள்
சிப்பாய்களாக நின்று போராடி
தோற்றுக் கொண்டேயிருக்கின்றன,
உறவுகளாய் வந்தமரும் அமைச்சர்கள்
நான் வீழ்வதற்காகவே
இடம் கொடுத்துவிட்டுப் போகிறார்கள்
சமையலறையின் தரையோடுகள்
சதுரங்க கட்டங்களாகவே
என்னைச் சுழற்றியடிக்கிறது,
கோட்டைகளாக இருப்பது
மன தைரியம் மட்டுமென்றாலும்
அவை வீழும் போது இந்த ராணியும்
அடிப் பட்டுதான் போகிறாள்,
ஒரே ஒரு திருத்தம் மட்டும்தான்
எப்போதும் அதுதான் நடக்கிறது,
ராஜாவிற்கு
யாராவது செக் வைத்துவிட்டால்
ராணி தான்
மீண்டும் உயிர் பெற்று வருகிறாள்,
தன் நகைகளை வைத்துக் காப்பாற்ற.
- மு. முகமது பாட்சா*
No comments:
Post a Comment