
எழுதாதப் பாடலின் வரிகளை
எடுத்துச் செல்கிறான் நாடோடி.
அவன் தோளின் மீது அமர்ந்திருக்கும் காகம்
நாகத்தின் கதையொன்றைச் சொல்கிறது,
நாகத்தின் வடிவில்தான் சாத்தான்
வந்ததாகப் பாதிரியார் சொல்லியிருக்கிறார்,
ஆதாமின் விலக்கப்பட்ட கனி
இன்னமும் இருக்குமா?
மண்டைக்குள் மரமாக முளைக்கிறது,
அவளும் அப்படித்தான் சொன்னாள் ,
தவறில்லாமல் தவறு செய்வது பாவமில்லை,
ஆசைக்காகச் செய்த கொலை ஆசையைக் கொல்கிறது ,
பாடாத பாடலை நாடோடி சுமந்து திரிகிறான்,
தேசாந்திரியின் கால்களுக்கு
பாதைகளென்பதே கிடையாது,
காகமும் அவனும் அடிக்கடி பேசிக் கொள்கிறார்கள்.
எழுதாத பாடலின் வரிகள்
அநாதியாகவே இருக்கிறது.
அவனது காகம் மட்டுமே அறியும்.
அவன் இறந்த பிறகு
அவனருகில் அமர்ந்து பாடுவதற்காக
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment