
கண்களை மூடி
காலாட்டாமல் இருந்த வேளையில்தான்
களவாடிச் சென்றுவிட்டார்கள்,
என் உயிரை !
சில நேரங்களில்,சிறுத் தூக்கம்,
பெருந் துக்கங்களாக மாறிவிடுகின்றன .
உறக்கங்களோடு உறவாடும் போதும்
உறவுகளை,
அருகினில் வைத்துக் கொள்ளக் கூடாது !
சேர்த்து வைத்த திரவியங்கள் கூட
தீராத வியாதிகள்தான்.
ஆசை மாளிகைகளை, களவாடிச் செல்ல
அருகினில் இருப்பவர்கள்தான்,
அதிகம் ஆசைப் படுகிறார்கள் !
ஆட்சிக் கட்டிலும், அரசப் பதவிகளும்,
குழிகளில்தான் புதைக்கப் படுகின்றன .
ஆசைகள் மட்டும் அடுத்தவரிடம்,
இடம் பெயர்ந்து ஆட்சி செய்கின்றது !
முட்டாள்களாக முன் வந்து நின்றவர்கள்,
அதிகாரத்தின் கைகளாக
எளிதில் இடம் மாறி விடுகிறார்கள் !
அந்தோ, தூரத்தில் புலம்பி நிற்பவர்கள்,
என்னைப் பார்த்து
தூரத்தில் நின்று கையசைத்தவர்கள் !
அந்தோ, தூரத்தில் கலங்கி அழுபவர்கள்,
என்னை அரியணையில்
தூக்கி வைத்து அழகு பார்த்தவர்கள் !
அவர்களின் கண்ணீர்த் துளிகளின்,
விடை தெரியாத கேள்விகளின் முதுகில்தான்
என், பெருந் தூக்கம் பயணிக்கிறது !
விடை கொடுங்கள் துரோகிகளே !
- மு.முகமது பாட்சா 08/12/2016
No comments:
Post a Comment