
நகர்த்த முடியாத அந்தக் கவிதையை
நகர்த்திக் கொண்டிருந்தார்கள்,
அறிவு ஜீவியொருவன் எழுதியதாக
அதன் கீழ், அச்சிடப்பட்டிருந்தது !
வார்த்தைகளின் கனத்தைவிட
ஜாலத்தின் எடைகள் கூடியிருந்தன,
தள்ளிக் கொண்டிருந்தவர்களும்,
ஒன்றிரண்டு வார்த்தைகளை
திருடிக் கொண்டிருந்தார்கள் !
எட்டிப் பார்த்த சிலர்,
அதில் விழுந்து
இறந்துவிட்டதாகச் சொன்னார்கள் !
எழுதினவன், அதன் எழுத்துகளில்
உட்கார்ந்திருப்பதாகச் சொல்லப்பட்டது !
இத்தினை கனமான கவிதையை
நானும் பார்த்ததில்லையென்றே
நம்பத் தொடங்கினேன்...
அந்தப் பக்கமாய், எட்டிப் பார்த்த 'ஈ'யொன்று
எட்டி உதைத்துவிட்டுப் போனது,
அந்தக் கவிதையை !
பொருளேயில்லாத கவிதையை
புரட்டிக் கொண்டிருக்கும் இவர்கள்,
புத்திசாலிகளாக இருக்க
வாய்ப்பே யில்லையென்று
சொல்லிவிட்டுச் சிரித்தது !
முட்டாள்களின் வரிசையில்
நானும்தான் உட்கார்ந்திருக்கிறேன்,
சிந்தித்துத் தொலைத்த தவற்றுக்காக !
- மு.முகமதுபாட்சா* 15/12/2016
No comments:
Post a Comment