Wednesday, 13 December 2017

கூவம் நாறுகிறதா?



கட்டாந்தரையில் 
படகுகளை ஓட்டிக் கொண்டு 
வாழ்க்கையை நகர்த்துகிறோம் ! 

நீரில்லாத இடத்தில்தான், 
நீச்சலடிக்க முடியாமல் 
மூழ்குகிறோம் ! 

காற்றும் மழையும், 
எங்களை நகர்த்திக் கொண்டு 
எங்கோ செல்கிறது ! 

உயர்ந்த மாளிகைகள், 
உப்புக் கரித்த எச்சிலை, 
எங்கள் மீதுதான் துப்புகின்றது ! 

நகரத்தின் நாற்றங்களென்று 
எங்களுக்குப் பெயர் வைத்தவர்களே... 
உங்களின் நாற்றங்களை, 
நாங்கள்தானே 
சுத்தம் செய்கிறோம் ! 

காற்றின் பெரும் மூச்சில் 
விழுந்த மரங்களையும் கூட
நாங்கள்தானே.. 
நகர்த்தி வைக்கிறோம் ! 

கழிவு நீரில் கால்வைக்கவும் 
கூசும் உங்களுக்கு, 
எங்களின் 
கைகளை விரித்து வைத்துத்தானே 
காரில் ஏற்றுகிறோம் ! 

கூவக்கரை வீடுகளை 
அப்புறப் படுத்துங்கள் என்பதுதான் 
உங்களின் பிரதான கோரிக்கை...! 

நல்ல நதியை 
நாற்றமடிக்க வைத்தவர்களே, 
நீங்கள்தான் என்பது 
உங்களுக்கே தெரியவில்லை ! 

உங்கள் நாற்றத்தில்தானே.. 
நாங்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் ! 

மறந்து விடாதீர்கள்... 

எங்களின் சுவாசத்தை 
இரவல் வாங்கிக் கொண்டுதான் 
நீங்களே , இன்று 
சுவாசித்துக் கொண்டிருக்கிறீர்கள் ! 

- மு.முகமது பாட்சா*
13/12/2016

No comments:

Post a Comment

Popular Posts