
கதையின் வாசலில் உட்கார்ந்து கொண்டு
கவிதை எழுதிக் கொண்டிருக்கிறேன் ,
பட்டாம் பூச்சிகளின் வண்ணங்களை
தூவிச் செல்லும் அந்தப் பறவையின் பெயர்
பட்டாம்பூச்சி என்றே கூட இருக்கலாம் ,
வண்ணங்களை எழுத்தில் சேர்த்த பிறகுதான் தெரிந்தது
நானொரு ஓவியன் என்று !
என் ஓவியத்தில் மிளிர்ந்த தாரகையின்
கண்களின் மையெடுத்து
கவிதைக்கு முற்றுப் புள்ளி வைக்கிறேன்,
அஃது அவள் கன்னத்தில்
திருஷ்டிப் புள்ளியாய் உட்கார்ந்திருக்கிறது ,
கவிதையெழுத வந்தவன்
அவளோடு கதையொன்றில் நுழைகிறேன்,
கதையின் வாசல் எங்களுக்காகவே திறந்திருக்கிறது,
உங்கள் வீட்டின் சன்னல் கதவுகளை மூடி வையுங்கள்,
நாங்கள் பட்டாம் பூச்சிகளாய் உருமாறி
உங்களின் வீடுகளுக்குள்ளேயும் நுழையக் கூடும் !
- மு.முகமது பாட்சா*
21/12/2016
No comments:
Post a Comment