
அறிவு ஜீவிகளின் மத்தியில் வந்து
அமர்ந்து கொண்டது
பெட்டைக் கோழியொன்று !
நாட்டுக் கோழியென்பது சரியா?
அல்லது
வீட்டுக் கோழியென்பது சரியா?
என்று ஆராய்ச்சி திரும்பியது !
நாட்டிற்குள்
நகரமும் அடக்கமாகும்,
காட்டுக் கோழியென்பதுதான்
சரியாக இருக்குமென்று
வாதம் முன்னெடுக்கப் பட்டது !
வீட்டிற்குள் வளர்வதால்,
வீட்டுக் கோழிதான் சரியென்று
மெச்சும் அறிவாளியொருவர்,
நச்சென்று சொன்னார் !
எந்தக் கோழியாக இருந்தாலும்,
இறைச்சிக்குத்தான் உதவுமென்பதால்
கறிக்கோழியென்பதுதான்
சிறந்த வார்த்தையென்று
புதிய அறிவாளியால்
பொருள் விரித்து வைக்கப் பட்டது !
திடீரென்று சிரிப்பை விதைத்த
ஓர் அறிவின் ஜீவி,
முட்டைக் கோழிக்காகவா
இத்தினை நீண்ட விளக்கமென்றார் !
ஆய்வைத் தொடங்கியவருக்கோ,
அத்தினைக் கடுப்பு...
முதலில் கோழியென்பதே,
"தமிழா? அல்லது தேவ நாகரியா?"
விளக்கம் சொல்லுங்களென்றார் !
இப்போதுதான், புதுக் குழப்பம்
இறக்கைகளைக் கட்டிக் கொண்டு
வந்தமர்ந்தது !
இறகுகளையெடுத்து, அவர்கள்
தலைகளை
சொறிந்து கொண்ட வேளையில்தான்
பெட்டைக் கோழி
அங்கிருந்து பறந்து போனது !
- மு.முகமது பாட்சா*
17/12/2016
No comments:
Post a Comment