தியாகத் திருநாள்

இஸ்மாயில் அம்சமான
இஸ்ஸலாமிய வம்சமே
அஸ்ஸலாமு அலைக்கமென
அனைவர்க்கும் வணக்கமே!
துல்ஹஜ்த் திங்களின்
பத்தாவது நாளிலே
பக்ரூ ஈத் கொண்டாடும்
பாய்களுக்கு வாழ்த்துக்கள்.
நபித்தூதன் இப்ரஹிம்
தவப்புதல்வன் இஸ்மாயிலை
அல்லாவின் கட்டளையில்
அர்ப்பணிக்கத் துணிந்த நாள்.
இறைவனுக்குத் தியாகமாய்
தலைகொடுத்துத் தனை ஈய
நிறைந்தவன் பக்தி மெச்சி
விரைந்தவன் அல்லா வாழி!
தூயபக்தி வாழ்த்த வந்தான்.
நேயமதைப் போற்றிச் சொன்னான்.
பக்ருவே போதுமென்றான்.
பலியேற்று மனிதங் கண்டான்.
குர்பானிச் சமபந்தி
கூடியே உண்டிடுவோம்.
சர்வமும் சமமாவோம்
தர்மமேக் காத்திடுவோம்.
உலகமதன் நலம் வாழ
உயிர் கொடுக்க விழைந்தானை
உளம் மகிழ விருந்தளித்து
உறவுகொண்டு வணங்கும் நாள்.
அனைவரும் சகோதரரே!
அன்பு மொழித் தான் பாயே!
அப்பனென்றும் மாமனென்றும்
அத்தனையும் நாமானோம்.
சொந்தமான இரத்தங்களே!
பந்தமான உறவுகளே!
எந்தபேதம் இல்லாமலே
இந்த மண்ணில் வாழுவோமே!
தியாகத்தின் திருநாளே!
தேவனல்லாப் பெருநாளே!
இறைத்தூதன் இப்ரஹிமே!
இதயங்கொள் நந்நாளே!
மெக்காவுக்கும் மதினாவுக்கும்
முகமத் நபி யாத்திரையே
இக்காலும் ஹஜ்பயணம்
இறைக்கடன் திருப்பயணம்.
இஹ்ராமை அணிந்திருப்பார்.
எல்லோரும் சமமென்பார்,
ஒற்றுமை விளக்கமாக
ஹஜ்ஜுக்குப் போய்வருவார்
கஃபாவைச் சுற்றிவந்தால்
சம்சம் நீர் குடித்துவிட்டால்
பிறவிப்பயன் பெற்றிடலாம்
பிறவிக்கடல் அற்றிடலாம்.
ஹாஜியாக ஆகிவிட்டால்
கடமைகள் நிறைவுற்றால்
அல்லாவின் அமைதியில்
அவன் சரணாகலாம்.
பி.கு::பக்ரு--செம்மறியாடு.
இஹ்ராம் --ஹஜ்பயணச் சீருடை.
கஃபா--மெக்கா புனிதத்தலம்.
சம்சம்--இஸ்மாயில் தோற்றுவித்தப் புனித நீரூற்று.
ஹஜி---ஹஜ் பயணம் சென்று வந்தவர்.
கொ.பெ.பி.அய்யா.
No comments:
Post a Comment