
போஸ்ட் மார்ட்டம்
நான் நகரத்தின்
பிரபலமான ஒரு பிணக்கூறு மருத்துவன்
பிரபலமான பல பிரேதங்களை
அறுத்திருக்கிறேன்
மர்மமாக கொல்லப்பட்டவனின்
பிரேத பரிசோதனை மேஜைக்கு
கருவிகளுடனும்
ஏற்கனவே தட்டச்சு செய்யப்பட்ட காகிதங்களுடனும்
நான் வருகிறேன்
பிரேதம் நிச்சலனமாக
படுத்திருக்கிற து
என் முகத்தில் லேசான பிரேதக்களை படர்ந்திருப்பதாக
எனது உதவியாளர்கள் கூறினார்கள்
அரசாங்கப் பிணங்களை
அறுக்கும்போது மட்டும்
ஏனோ என் கைகள்
நடுங்குகின்றன
போஸ்மார்ட்டம் மேஜையில்
படுத்திருந்தவன்
வறண்ட கண்களோடு
கேலியாக புன்னகைக்கிறான்
மருத்துவர்களாகிய நாங்கள்
கடவுளுக்கு நிகரானவர்கள்
நாங்கள் அறியாதது
ஒன்றும் இல்லை
நான் அவனது புன்னகையைப் பார்க்க விரும்பவில்லை
ஒரு செத்த மாட்டை உரிப்பதுபோல
அந்த உடலை
அவனது மார்பிலிருந்து நேராக கீறினேன்
ஒரு உயிருள்ள உடலைவிட
வினோதங்கள் நிரம்பியது
ஒரு செத்த உடல்
அந்த உடலில் எதையோ
தேடுவது போல
பாவனை செய்யத்தொடங்கினேன்
உண்மையில் அந்த உடலில்
நான் அறிவதற்கு ஒன்றுமே இல்லை
" டாக்டர் என்ன தேடுகிறீர்கள்"
என்றான் மர்மமாக இறந்தவன் .
"உன் சாவிற்கான காரணங்களை "
என்ற என் பதிலை சலனமில்லாமல்
கேட்டுக்கொண்டான்
பிறகு ஏதோ நினைத்துக்கொண்டவனாய்
சட்டெனெ தன் விலாவை
திருப்பிக்காட்டியவன்
" மறைப்பதற்காக
உங்களிடம் கொடுத்தனுப்பப்பட்ட
அந்தக் கொலைக் கருவியை
எங்கே வைப்பது என்று சிரமப்படாதீர்கள்
இதோ இந்த விலா எலும்பின் கீழ்
வைத்து தைத்துவிடுங்கள்
யாருக்கும் தெரியாது" என்றபோது
அவனது உடலைவிட
அவனது குரல்
குளிர்ந்திருந்தது.
என் க்ளவ்ஸ்களை கழற்றிவிட்டு
பிரேத பரிசோதனை அறிக்கையில்
குனிந்து கையெழுத்திட்டபோது
யாரோ ' களுக் ' என்று
சிரித்ததுபோலஇருந்தது.
உண்மையில்
அங்கே யாரும் இருக்கவில்லை
.
- மனுஷ்ய புத்திரன்
No comments:
Post a Comment