
வஞ்சத்துள் வஞ்சம் உட்கார்ந்திருந்தது
ஆசையின் வேள்விகளில்
சாம்பலாய் உயிர்க்கிறது உறவின் பந்தம்,
துருபதனின் துரோகத்தீ
திட்டத்துயுமனாய் சுழன்று கொண்டிருக்க,
தமக்கையின் தீயாயில்லாமல்
துரோணனின் பகையாய்ச் சுழன்றது,
கள்ளன் கை கோர்த்தான் ,
துரோகத்தின் முனை பற்றி....
சூதாடித் தருமன் துணை போனான்
'அசுவத்தமா இறந்துவிட்டான்.
ஆம் அசுவத்தமா இறந்துவிட்டான்!'
சத்திரியம் சத்தியம் மறந்து பேசியது...
யானையாய்ச் சாய்ந்தான் துரோணன் ,
திட்டத்துய்மன்
திருட்டத்துய்மனாய் சாய்த்தான்,
அசுவத்தமன் அழவில்லை...
வஞ்சத் தீயெடுத்து
வாளுக்குள் சொருகிக் கொண்டான்,
முடிந்துவிட்ட குருசேத்திரத்தின் முடிவில்
மீண்டும் ஒரு முகவுரை எழுதத் தொடங்கினான்,
திருட்டத்துயுமன்
திட்டுத் திட்டாய் இறந்து கிடக்க
கூடவே துணைக்கனுப்பினான்
துரோக பாண்டவர்களின் கொழுந்துகளை....
ஏகலைவனின் விரல் இன்னமும்
அங்கேயேதான் துடித்துக் கொண்டிருந்தது....
யாருக்காகடா இந்தப் போர்?
ஏகலைவனின் வில் அம்பொன்று
கண்ணனின்
கால்விரலைக் குறிப் பார்த்துக் கொண்டிருந்தது.
- மு.முகமது பாட்சா*
No comments:
Post a Comment