ஆடு
பசும்புல் வெளியில்
பாதம் ஊன்றி
துள்ளிய நாட்கள்
முடிந்துவிட்டன
காந்திக்கு பால்சுரந்த
கருணைக்குப் பரிசு
கழுத்தில் இறங்கிய
கத்தி வெட்டு
காற்றில் கலந்தது
கடைசி மூச்சு
காத்தவராயன்
கடவுளே சாட்சி
இனியென் பிணத்தை
ஈய்க்கள் மொய்க்கும்
ஆடைத் தோலுரித்து
அம்மணமாகும்
சமையலறைக் காற்றிலென்
சதையின் வாடையில்
உலர்ந்த நாக்குகள்
உமிழ்நீர் சுரக்கும்
வயிற்றுச் சுடுகாட்டின்
அமிலத் தீயில்
என்னுடல் துண்டுகள்
எரிந்து மலமாகும்
எருவாகிப் பின்பு
செடிவேர் பற்றி
கிளைகளில் அசையும்
பூக்களில் சிரிப்பேன்
விரல்கொய்த பெண்ணின்
கூந்தலில் அமர்ந்து
நாசிகள் உணர
வாசனை அனுப்புவேன்
ஆயினும்-
உரித்த என் தோல்
சாவுப் பறையில்
இறப்பின் துக்கத்தை
என்றும் ஒலிக்கும்.
பாடலாசிரியர் அண்ணாமலை
சென்ற ஆண்டு மாரடைப்பால் காலமான திரைப்படப் பாடலாசிரியர் 'அண்ணாமலை' அவர்கள் குத்துப் பாடல்களுக்குச் சொந்தக்காரர் என்றாலும், நல்ல கவிதைகளுக்கும் சொந்தக்காரர் ! அவரது நினைவஞ்சலியாக அவரது கவிதையொன்று !
No comments:
Post a Comment