
கோடுகளுக்குள் ஒளிந்து கொள்ளும் நான்
என்னை விலகாமல் பார்த்துக் கொண்டிருக்கிறேன்,
என் மீது பூசப்பட்ட மாயங்கள் கழன்று
தொன்ம பூச்சுகளுக்குள் ஓருலகம் விரிகின்றது...
தொலைத்தவற்றைத் தேடியெடுக்கிறேன்....
கைகளில்
கூழாங்கற்களும் சிப்பிகளும் நிறைந்திருக்கின்றன,
ரவிவர்மாவின் அழகியொருத்தி
என்னைப் பார்த்து விட்டுச் சிரித்துப் போகிறாள்,
அவளுக்கு எப்படித் தெரியும்
எம்.எஃப்.உசைனின் குதிரைகளில்தான்
நான் பயணித்து வந்திருக்கிறேன் என்று,
வான்கோவின் வயல் வெளி பச்சையங்கள்
இன்னமும் என்மீது ஒட்டிக் கொண்டிருக்கின்றன,
இவன் நவீன ஓவியமென்று நகைக்கிறீர்கள்
நகைத்துவிட்டுப் போங்கள்....
நுண்ணருவ (abstract )ங்களுக்குள் நுழைந்து
எண்ணங்களை எடுத்துவருகிறேன்,
நீங்கள் புரிந்ததை படித்து முடிப்பதற்குள்
நானொரு காவியத்தை வரைந்து முடித்திருப்பேன்,
புரியவில்லையென்றாலும் பரவாயில்லை
நீங்கள் மரபுகளையும்
அப்படித்தானே சொல்லிக் கொண்டிருக்கிறீர்கள்.
- மு.முகமது பாட்சா
(படத்தில் என் மகன் முகமது ஃபாரூக், படம் எடுத்தது இளைய மகன் முகமது ஃபைசல்..இடம் ஆர்ட்டிஸ்ட் அருணகிரி அவர்களின் ஓவிய காட்சியகம்)
No comments:
Post a Comment