
ஓர் அழிவைச் சந்திக்கும் முன்பாக
எல்லோரும் அதைப் பற்றியேத்தான்
பேசிக் கொண்டிருந்தார்கள்,
கடல் நுரைத்து கபளிகரிக்கும் அபகரிப்பில்
தொலைந்துவிடுவோம் என்று பயந்தார்கள்,
நட்சத்திரங்களின் எரிக்கல் மழைகளில்
பொசுங்கிப் போகும் பூமியென்றார்கள்,
பூமிப் பசியின் அடிவயிற்று ஆழத்தில்
சீரணிக்கவும் வாய்ப்புண்டாம்,
மாயன் காலண்டரும், மதவாதிகளும்
மல்லுக் கட்டிக் கொண்டிருக்க...
ஆங்காங்கே பறவைகள்
இறந்தே வீழ்கின்றன,
காரணமேயில்லாமல் விலங்குகள் கூட
காணாமல் போயின,
தொலைந்து போன வனங்களின் வேர்கள்
மூர்க்கம் பேசிக் கொண்டிருக்க,
கனிமங்களைக் குடிக்கும் ஆழ் குழாய் கிணறுகள்
ஆக்ரோசம் புதைக்க,
அணு உலைகளின் பெரு மூச்சு
அகலாமல் விட்டுக் கொண்டிருக்க,
உலகத் தலைவர்கள் ஐ நா மன்றத்தில்
பசுமைக்காகப் பேசிக் கொண்டிருக்கிறார்கள்,
ஆயுதங்களுக்கான ஒப்பந்தம்
அங்குதான் கையொப்பமாகிறது,
அடுத்த யுகத்திலும் கூட யாரும்
அறிந்து கொள்ள வாய்ப்புகளில்லை,
புதைகுழி வெட்டிக் கொண்டு புதைந்து போன
ஓர் அறிவியல் சமூகத்தைப் பற்றி.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment