
நதிகளைத் தேடிக் கொண்டிருந்தார்கள்
காலின் கீழோடிய நதியொன்று
காணாமல் போனதாய் புகாரும் பதிவானது,
வயல்கள் தின்றிருக்குமென
அரசியல்வாதியொருவன் யோசனை பதிகிறான்
நதியோடியப் பாதைகளில்
நாகரீகம் வளர்ந்துவிட்டதாக
தொல்லியல் குறிப்புகள் துல்லியம் பதிகிறது,
தவறிய அழைப்புகளில் நதியை மீட்டுவிட
நாடகங்கள் அரங்கேறுகின்றன
ஆசிரமத்தின் கீழ் ஒரு நதி இறந்து கிடக்கிறது,
அசத்தும் உயரக் கட்டிடங்களின் கால்களில்
சில நதிகள் நசுங்கிக் கிடக்கின்றன,
நதிகளை மீட்பதற்காகவே
நட்சத்திர நடிகர்கள் விளம்பரம் செய்கிறார்கள்,
எல்லோரும் சேர்ந்து
நதிகளைத் தேடிக் கொண்டிருக்கிறோம்,
தவறிய அழைப்புகளாய்
உயிரோடிருந்த சில நதிகளும் இப்போது
காணாமல் போய்க் கொண்டிருந்தன....
ஆங்காங்கே நடுக்கலொன்றையும்
சேர்ந்தே நட்டுக் கொண்டு வருகிறோம்
நதிகளோடிய நாடுதான் இஃது என்ற
தொல்லிய குறிப்புகளோடு.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment