
கேன்வாசின் மீது தெறிக்கப்பட்ட வண்ணங்கள்
குடிசையின் ஒழுகலாய் வழிந்து நிற்க
சற்றே உற்றுப் பார்க்கிறேன்,
அதில் பாலகியொருத்தி பாழ் சிதைவில் கிடக்க,
சுற்றிலும் யோனியின் உதிரம் கொட்டிக் கிடக்கிறது,
பட்டை தூரிகையெடுத்து நிட்டை கலைக்கிறேன்,
துப்பாக்கிப் பிடித்த ஒருவன் வைத்த பொட்டுகளில்
சிதறிக் கிடக்கின்றன உடற் பாகங்கள்,
ஒன்றிரண்டு கோடுகளால் தூரிகையை அலசுகிறேன்,
நித்திரை கலைந்த சாமியாரின் பின்
ஒரு லார்வாப் புழு அசுரம் எடுக்க ,
காலடியில்
ஆடையிழந்தப் பெண் அழுது கொண்டிருந்தாள்,
தூரிகையை மாற்றி வனங்களை இழுத்தேன்,
இடையில் எவனோவொருவன்
மரங்களை வெட்டிக் கொண்டிருந்தான்,
வானம் வரைந்தேன்
நீலத்திட்டுகளின் ஒழுகலில்
ஓசோனின் ஓட்டை அடைய மறுத்தது,
நதிகளை வரைந்த போதும் ,
வயல்வெளிகள் இரத்தத்திட்டுகளில் இறந்து கிடந்தன.
மூளைக்குள் நெளிந்த நெகிழிக் குழம்பால்...
நான்கைந்து வண்ணங்களை ஒன்றாக்கி வீசினேன்,
போதி மரத்தின் கீழ் பாம்புகள் நெளிந்து கொண்டிருக்க,
புத்தன் எங்கோ சென்று கொண்டிருந்தான்.
அபாரம்! அபாரம்! என்று
எல்லோரும் எழுந்து நின்று கை தட்ட
என் கைகளைச் சாத்தான் முத்தமிட்டுக் கொண்டிருந்தான்.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment