Wednesday, 27 September 2017

கதம்ப மாலை

நான்
இறந்துவிட்டதாக சொன்னேன் ,
மூக்கில் 
விரலை வைத்து பார்த்தவர்கள் ,
இன்னமும் சாகவில்லை 
என்றார்கள் !
.
செத்த பிணம்  பேசவா செய்யும் !

***

தேவதைகளுக்கு மட்டும் 
சிறகுகள் இருக்கின்றதே , 
ஏன் ? என்று கேட்டாள் , 
என் செல்லம்மா ! 
கடவுளிடம் சேதிகளைச் சேர்ப்பதற்கு 
சிறகுகள் வேண்டும்தானே என்றேன் , 
கடவுளிடம் சென்றுவிட்ட பாட்டிக்கும் 
சிறகுகள் முளைத்திருக்குமா ? 
என்று கேட்கிறாள் !

***

என்னை
தள்ளி வைத்துவிட்டுப் போகும்
அந்தப் பார்வை ,
யாரையோ
களவாடிக் கொண்டு போகிறது !

***

என் கவிதைகளில் போதையிருப்பதாக 
அவள் சொல்கிறாள் ! 
அவள் கண்களைப் பார்க்க முடியாமல் 
கவிழ்ந்து நிற்கிறேன் , 
கவிதைகள், காமத்தை தொட்டு விட்டால் 
கற்பிழந்ததாகச் சொல்லி விடுவாள் !

***

நெருப்பின் வார்த்தைகளில்
குளிர்ந்து போனதாக சொன்னார்கள் ,
சாத்தான் வேதம் ஓதுகிறான் !

***

அழுகையின் ஓசையில்  
குழந்தை ஜீவித்ததாய்  
சொன்னாள் தாதி ! 

அழாதே யென்றாள் அம்மா !  

அழவைத்தது காதல் ! 

அழுகையின் வாசலில் ஏழை ! 

அழுதுவிடு என்று உத்தரவு ,
துக்க நிகழ்வில் ! 

சுமைகள் குறையுமென்று ,  
அறிவியல் ! 

அழுகை , வாழ்க்கையின் வருகை !
.
***

உறங்கும் உண்மைகளை 
எழுப்பிவிடுங்கள் ,
வதந்தீகள் தீ வைக்கின்றன !

***

பிரார்த்தனைகள் 
இறைந்து கிடக்கின்றன , 

பூசாரியின் மடி நிரம்பும் காசுகள் , 

வரிசையில் வருகின்றது 
தீர்வு கேட்கும் பிரச்சனைகள் ! 

ஸ்பெஷல் தரிசனத்தில் 
சிறப்புக் கோரிக்கைகள் , 

அடிக்கும் கொள்ளைகளுக்கு 
பாதுகாப்புக் கேட்டு ! 

வெளியிலிருந்து வீசப்பட்ட 
பிரார்த்தனை யொன்று ,

'தேசத்தைக் காப்பாற்று ! ' 

நடை கதவை சாத்துகிறார் அறங்காவலர் , 
சிலை திருட்டு அதிகமாகிவிட்டது ! 

***

சாத்தானின் 
எச்சில் மரங்கள் 
நிழல் கொடுப்பதில்லை !

***

தேர் போன பாதையில்தான்
நானும் போனேன்,
தேர் வந்து சேர்ந்தது...
நினைவுகள் மட்டும்
அங்கேயே நிற்கிறது!
.
.........இருத்தியது யார்?.......
***

- மு. முகமது பாட்சா 

No comments:

Post a Comment

Popular Posts