
பேரம் பேசியும் படியாதவர்கள்
அங்கேயே உட்கார்ந்திருக்க,
படிந்துவிடும் நம்பிக்கையில்
பேசிக் கொண்டேயிருந்தார்கள்,
நுட்பமாகவே நகர்கிறது பேரம்
பிணைத்த சங்கிலிகள்
ஒவ்வொன்றாய் அவிழ்கின்றன,
வெட்கப்படாமல் பேரம் எகிர்கிறது
அவர்களுக்குத் தெரியும்
குதிரைகள் விற்பனைக்கென்று
கடிவாளங்களைக் கழற்றியோட
குதிரைகள் எத்தனிக்கின்றன...
துப்பாக்கிகளின் கண்கள்
தோட்டாக்கள் வழி குறி பார்க்க...
பேரம் பேசியவர்கள்
கை கலப்பில் இறங்கியிருந்தார்கள்,
பேரத்தின் முடிவில் இதுவும் சாத்தியம்,
சந்தைக்கடை முழுவதும் அவர்களையே
வெறித்துக் கொண்டிருக்க.
ஒன்றிரண்டு குதிரைகள் இறந்து கிடந்தன,
அங்குவந்த அதிகாரிகள்
பேரம் பேசிக் கொண்டிருந்தார்கள்
கரண்சிகள் இடம் மாறியவுடன்
'இதெல்லாம் அவர்கள் பிரச்சனை
நமக்கேன் வம்பு' என்று நகர்ந்துவிட்டார்கள்.
மீண்டும் பேரம் தொடங்கியது...
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment