Friday, 29 September 2017

இரவின் படிமங்கள்

தானியங்கு மாற்று உரை இல்லை.

ஒழுங்கில்லாமல் மழை பெய்து கொண்டிருந்தது 
கோப்பையில் வழிந்து கொண்டிருந்தேன், 
குறையில்லாத இரவு தாலாட்டிக் கொண்டிருக்க 
தூங்காத குழந்தைகள் அழுது கொண்டிருந்தன, 
வயிற்றுப் பசியைக் களவாடிய இருட்டு 
வீதியெங்கும் இறைத்துவிட்டுப் போகிறது அழுக்குகளை, 
திருவோட்டில் விழுகின்றன பிச்சையாக எச்சில்... 
இழிவானப் பாத்திரத்திற்கேன் திருப் பட்டம்? 
வீசியெறிந்துவிட்டு நடக்கிறேன்......................... 
நடை பாதையில் காமம் பசியாற்ற 
யோனிகள் விற்பனைக்குப் பூச்சூடி நிற்கின்றன, 
விளக்குக் கம்பத்தின் கீழ் 
ஒரு தற்கொலை படித்துக் கொண்டிருக்கிறது, 
கட்டியவன் இயலாமையை 
காயங்களாய் தரிசித்துக் கொண்டிருக்கிறாள் பத்தினி, 
வேகமாய் வந்த வாகனமொன்று 
எச்சில் குழந்தையொன்றை துப்பிவிட்டுப் போகிறது 
கேவலங்கள் ஓடிச்சென்று கையேந்தி அழுகின்றன, 
இரவு ஆசிர்வதிக்கக் குழந்தை சிரிக்கிறது, 
கனவுகளில்லாத காயங்கள் 
நடை பாதைகளில் கண்ணுறங்கிக் கொண்டிருக்க... 
கூவத்திலே ஒரு பிணம் 
தலைவனுக்காகக் கால் பரப்பி அழுகிக் கிடக்கிறது, 
இருட்டு மௌனமாகவே அழுது கொண்டிருக்க.... 
ஒழுங்கில்லாமல்தான் மழை பெய்து கொண்டிருந்தது, 
இரவோடும் இருட்டோடும் 
அனைவரும் விழித்துக் கொண்டிருக்கிறோம். 
புரியவில்லையா? 
உங்களுக்கு நிச்சயம் புரியாது 
இரவின் படிமங்கள் நீங்கள் நினைப்பது போழில்லை, 
நீங்களாவது நன்றாக 
போர்வையை இழுத்துப் போர்த்தி உறங்குங்கள். 

- மு.முகமது பாட்சா


No comments:

Post a Comment

Popular Posts