
சொற்களைப் பிடுங்கிக் கொண்டோடுகிறாய்
கால் நழுவிய யாமம்
கண்களில் தீபங்களை ஏற்றிக் காத்திருக்கிறது,
வெறுமைக் காட்டில்
உட்கார்ந்திருக்கிறது தனிமை,
ஒற்றைச் சிரிப்பில் விழுந்த நட்சத்திரங்கள்
என்னை எண்ணிக் கொண்டிருக்கின்றன,
முற்களை விரித்துப் படுத்துக் கொள்கிறேன்,
மூங்கிலின் மெல்லிசை, காட்டினை வருடி நகர
யோசனையில்லா தூரத்தில்
நர்த்தனமாடுகின்றன நினைவுகள்,
கடிவாளம் போட்டு நிற்கும் கருங்குதிரையில்
நிர்வாணமாய் உட்கார்ந்திருக்கும் பெண்ணே,
எழ எத்தனிக்கும் என்னை
எட்டி உதைக்கும் உன் கால்களில்
என் புன்னகை ஒட்டிக் கொண்டு மிளிர்கிறது,
சொற்களை மீண்டும் மீண்டும் வீசியெறிகிறாய்,
காயம் பட்ட உதிரத் தேகத்திற்கு
அதையே கற்பூரமாக்கி கரைக்கிறேன்...
மாயப் பிம்பங்களின் மாமிச அழகாய் நகர்கிறாய்
உடைத்தெறிந்த கவிதையொன்று
என்னைத் தீ வைத்து எரிக்கிறது...நீ
புன்னகையுடன்
தேநீர் சுவைத்துக் கொண்டிருக்கிறாய்.
இன்னமும் ஒரு வாசம்
எங்கிருந்தோ வீசிக் கொண்டுதானிருக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment