
மதுவின் சுவையைக் கூட்டத் தெரியுமா,
அடிமைகளின் உதிரத்தை அதில் சேர்த்துப் பருகுங்கள் ,
உச்சத்தின் ருசி
அப்போதுதான் தெரியும் உங்களுக்கு,
உங்களுக்கும் கர்வம் முளைக்க
என் பெயரை உச்சரித்துப் பாருங்கள்
'கேயெஸ் சீசர் ஜெர்மானிக்ஸ்'
ஆனால் அவர்களென்னை
'கலிக்யூலா' என்றுதான் அழைக்கிறார்கள்,
அழைத்துக் கொள்ளட்டும்
அவர்களுக்கு அந்தச் சுதந்திரமும் இல்லையென்றால்
நான் நிச்சயம் அவர்களின் கடவுளாக இருக்க முடியாது...
டைபிரீயஸ் கிழவனின் மரணத்தைக் கொண்டாடியவர்கள்,
என் மரணத்தை மட்டும் விட்டுவிடவாப் போகிறீர்கள்,
அடிமை புத்தி இருக்கும் வரை ,
ஆதிக்கப் புத்தி இருப்பதும் தர்ம நியதிதான்.
நீங்கள்தான் எனக்காக அழுதீர்கள்,
நீங்கள்தான் எனக்காகப் பூச்சொரிந்தீர்கள்...
இன்று மட்டும் என்ன வந்தது?
பசியென்று அழுதீர்கள்,
உங்களை மிருகங்களுக்கு இரையாக்கினேன்,
வேலையில்லையென்றீர்கள் ,
விபச்சாரத்தைத் தொழிலாக்கினேன்,
என் சகோதரிகளையும்தான் பொதுவில் வைத்தேன்,
தேவையென்றால் அவர்களையும் ருசித்துக் கொள்ளுங்கள் ,
பணம் மட்டும் கஜானாவிற்கு வந்துவிட வேண்டும்,
நான் கடவுள்,
நீங்களென் அடிமைகள்...
உங்கள் குறைகளை என் கான்சலிடம் (அமைச்சர்) தெரிவியுங்கள்,
அவர் என் குதிரையாக இருந்தாலென்ன.
அவருக்கும் காதுகள் இருக்கிறது
தீவனத்தை மட்டும் ஞாபகமாக வைத்து விடுங்கள்
ஓ என் அடிமை 'காஷியல் செயிரீயா'
நீ எனக்கான கத்தியை தீட்டி வைத்திருப்பதைப்
பத்திரமாக வைத்துக் கொள்,
உன் கத்தி வேண்டுமென்றால் ஒரு நாள்
ஒரு விடுதலையை வாங்கிக் கொடுக்கலாம்,
உன்னைப் போல் முட்டாள்கள்
நாட்டில் அவ்வப்போது முளைத்துவிடுகிறார்கள்,
நீயும் என்னைப் போல் மாறிப்பார்,
அவர்களின் சுயம் விளங்கிவிடும்,
என்னைப் போன்ற கடவுள்களைக் கொன்றாலும்
மீண்டும்தான் பிறந்து விடுவார்கள்,
கடவுளுக்குத்தான் மரணமில்லையே.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment