
வார்த்தைகளை
நெசவு செய்து கொண்டிருந்தான்,
ஊடையும் பாவுமாக அவள் நினைவுகள்
அதில் பின்னிக் கிடந்தன,
அதன் வாசனை அவனுக்குப் பிடித்திருந்தது,
நெஞ்சிலதை விரித்து உறங்கினான்,
கனவிலவள் மெல்லக் கால் பதித்தாள்,
காட்டுக் குருவிகள்
அவனுக்குக் கவிதையெடுத்துக் கொடுத்தன,
அருவியின் சலசலப்பில் ஆடைக் கழன்றவள்
அவன் கண்களைத் திருடிக் கொண்டாள்,
பார்வையற்ற அவன்
மூச்சுக் காற்றின் வாசம் பிடித்து
அவளின் முகவரியைத் தெரிந்து கொண்டான்,
ஆடையாய் மாறி அவளை அணைத்தான்
கழற்ற மனமில்லாமல் அவளும் காமம் பிசைந்தாள்,
காடு கதறியது,
மேகம் காறித் துப்பியது,
உறங்கிய பறவைகள் சலசலத்தடங்கின,
துர் இரவை விரட்டிய பகலெழுந்த போழ்தில்
இடையனொருவன் அடையாளம் காட்டினான்
மலையின் அடிவாரத்தில்
பொன்னாடையுடன் இருந்த அவன் பிணத்தை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment