
விழுந்தே கிடந்தவர்கள்
எழுந்து பார்த்தார்கள்,
உலகம் வியப்பாய் இருந்தது
அவர்களுக்கு,
அடிமையாய் இருப்பது
பழகிப் போனதால்
அடிக்கடி காலில் விழுந்தார்கள்,
சாட்டையின் கையில்
சகடையாக இருந்தவர்களுக்கு
இப்போது தனி ஆவர்த்தனம்
சந்தோஷமாக இருந்தது,
முகத்தில் வெளிச்சம் பட்டவுடன்
கண்கள் கூசின,
ஆளுக்கொரு மைக் தரப்பட்டது
கண்டதையும் பேசி
கவிஞர்களாகிப் போனார்கள்,
ஆனாலும்
கண்கள் ஒத்திக் கொள்ள
அவர்களுக்கு
கால்கள் தேவைப் பட்டன,
பழக்கத் தோஷம்
சாப்பிடும் முன்பு அம்மா என்று
குரலெழுப்பினார்கள்..
இப்போது ஐயா ஒருவர்
தழுவிக் கொள்ள
சாட்டையை அவரிடம் கொடுத்து விட்டு
கால்களைத் தேடுகிறார்கள்.
அடி வாங்கினாலும்
சகடையாக இருப்பது
அவர்களுக்கு
சந்தோஷமாகவே இருக்கிறது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment