Saturday, 29 July 2017

விசித்திர மிருகம்

தொடர்புடைய படம்

நாம் கற்பனைகளை விழுங்கிக் கொண்டு 
மகிழ்ச்சிற்காக அலையும் 
விசித்திர மிருகங்களென்று சொன்னால்... 
என்னை விசித்திரமாகப் பார்க்காதீர்கள். 
துதி மொழிகளுக்குள் துயில் கொள்வது 
நமக்கு என்றுமே கை வந்த கலை, 
அதனால்தான் 
நடிப்பு மொழி அவர்களுக்குச் சுலபமாக வருகிறது 
அவர்களென்பது இங்கு அரசியல் வாதிகள்தான், 
நாம் கேட்க விரும்புவதை 
அவர்கள் அழகாகவே பேசுகிறார்கள், 
உணர்வுகளைத் தூண்டிவிட்டு 
அச்சங்களை எளிதில் விதைக்கிறார்கள், 
கொலைகள் கூட 
அவர்களுக்குக் கொடூரமாகத் தெரிவதில்லை, 
கைத் தட்டத் தெரிந்த நமக்கு 
அவர்களின் கன்னம் தட்ட அச்சம் தடுக்கிறது., 
மனித உரிமைகளை அதிகம் பேசும் அவர்கள் 
மனித சக்திகளையும் விற்பனை செய்கிறார்கள், 
நம்மைச் சுற்றிலும் 
காமிராக் கண்கள் சுற்றிக் கொண்டேயிருக்கின்றன... 
நாளை இந்தக் காமிராக் கண்களே 
தோட்டாக்களைப் புதைத்து 
நம்மைத் துளைத்தும் வெளியேறலாம்... 
அப்போதும் ஒரு கூட்டம் அங்கே மகிழ்ச்சியுடன் 
தலையாட்டிக் கொண்டேயிருக்கும், 
தங்கள் கைகளின் கங்கணமாய் அவர்கள் 
சாதிகளையும் மதங்களையும் கட்டித் திரிகிறார்கள்... 
இனியும், 
நாம் கற்பனைகளை விழுங்கிக் கொண்டு 
மகிழ்ச்சிற்காக அலையும் 
விசித்திர மிருகங்களென்று சொன்னால்... 
என்னை விசித்திரமாகப் பார்க்காதீர்கள். 
துதி மொழிகளுக்குள் துயில் கொள்வது 
நமக்கு என்றுமே கை வந்த கலை.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts