
இரகசியக் கவிதைதான் இஃதென்று
என்னிடம் கொடுத்தாள்...
நானும்
இரகசியமாகத்தான் பிரித்துப் பார்த்தேன்,
அஃது
இரகசியமாகவே என்னிடம்
எந்தச் செய்தியையும் சொல்லவில்லை,
கிழித்துக் காற்றில் பறக்க விட்டேன்
அவை வாவல்களாக
வானில் வலம் வரத் தொடங்கின,
எங்கிருந்தோ வந்த கழுகுகள்
இரகசியங்களை
ஒவ்வொன்றாகக் களவாடிச் சென்றன...
அவள் மீண்டும் என்னிடம் வந்து
இரகசியம் எங்கேயென்று கேட்டாள்,
நான் கழுகுகளைக் காண்பித்தேன்...
அவள் சிரித்துவிட்டு
அதுவல்லவே அந்த இரகசியம்'
எனச் சொல்லி இடம் நழுவினாள்,
நான்
அவளின் பின்தான் தொடர்ந்து செல்கிறேன்,
இரகசியம் இப்போது என்னை
இரகசியமாகவே கடத்திச் செல்கிறது...
புரியவில்லைதானே?
இரகசியங்கள் எப்போதுமே அப்படிதான்,
சீக்கிரத்தில் புலப் படாது...
புலப்பட்டால்
அஃது இரகசியமாகவும் இருக்க முடியாது.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment