
எனக்கான முகமியை அணிந்து கொள்கிறேன்
அஃது எனக்காக
அரசு வடிவமைத்துக் கொடுத்ததுதான்,
என்னைப் போலவே
எல்லோரும் முகமிகளுடன்தான் திரிகிறார்கள்,
முகமிகள் இல்லாமல்
யாரும் நடமாடவே கூடாதென்பது
அரசரின் ஆணை,
சிரிப்பது போலவே
நேர்த்தியாய் முகமிகள் வடிவு செய்யப் பட்டுள்ளன,
எங்களின் அழுகையை நீக்க
அரசு கொண்டுவந்த எளிய திட்டமிது...
இப்போதெல்லாம் நாங்கள்
பொது வெளிகளில் அழுவதே கிடையாது,
அரசருக்கும், அமைச்சர்களுக்கும் கூட
முகமிகள் உண்டு,
அதினில் அவர்கள்
புத்தனைப் போலவே புன்னகைத்திருப்பார்கள்...
அவர்களின் உதிரம் தோய்ந்த இரத்த நாக்குகள்
வெளியில் தெரியவே தெரியாது,
முகமிகள் இல்லாமலும்
இன்னமும் இருக்கத்தான் செய்கிறார்கள்...
சிறைகளில் தேசத் துரோகக் கைதிகளாக.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment