
சிதைந்து போயிருந்தது
அந்தப் பறவையின் கூடு
ஒரு வரலாறு
வாழ்ந்து மறைந்த
அடையாளங்களோடு ,
இந்த ஒற்றை மரம்
நிழலுக்காக
விட்டு வைத்திருக்கலாம் ,
தோப்பின் மற்ற மரங்களைக்
காணவில்லை ,
புகார் வாங்கிய
வனத் துறைக்காரன்
உட்கார்ந்திருந்தது
அந்தத் தோப்பின்
மற்றைய மரத்தின்
ஒற்றை மரமாக இருக்கலாம் ,
வரலாற்றின் படிமங்களாய்
மிருகங்களின் தோல்கள்
மணிப் பர்சுகளாகவும்
உயர் ரக ஷூக்களாகவும் ,
நாளை
நகரமாகவும் ஒப்பனைப் படலாம்
இந்த வனம் ,
தண்ணீரைத் தேடி
மனித வேர்கள் திரியலாம் ,
மரங்களை நடுங்கள்
என்ற கோஷங்கள் விரியலாம் ,
ஆனாலும்
மேகங்கள் வனத்தைத் தேடி
அலையும் அவ்வேளையில்...
பறவைகள் எங்காவது
எச்சத்தை விதைத்து
சொச்சமாய் ஒரு வனம்
விளைந்திருக்கும் ,
அந்த மாய வனம் காக்க
மிருகங்கள்
வேலிப் போட்டிருக்கக் கூடும் ,
பார்த்துப் போங்கள்...
அங்குப் போகும் மனிதர்கள்
காணாமல் போவார்கள்!
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment