அகம் பிரம்மம்

அறையின் கதவை தாழிட்டுக் கொண்டேன்
தனிமை இப்போது தேவைப் படுகிறது,
என்னோடு நான் பேசியாகவே வேண்டும்
எங்களுக்குள்ளான பிரச்சனைகள்
இன்னமும் தீர்ந்த பாடில்லை,
நானென்பதும் என்'னென்பதும்
இரட்டைக் குதிரைகளின் சவாரிதான்,
அகம் நுழைந்த கர்வம்
என்னை அடிமையாக்கப் பார்க்கிறது,
கழுத்தில் பட்டைக் கட்டி
சங்கிலியால் கட்டி வைத்திருக்கிறது,
நான் நாயாக மாறிக் குரைக்கிறேன்...
அது சிங்கமாகக் கர்ஜிக்கிறது,
நீங்கள் தயவு செய்து
அறைக்குள் நுழைந்து விடாதீர்கள்...
இரண்டுமே உங்களைக் குதறி விடலாம்,
அகம் பிரம்மம் என்பது
மாயா விநோத வார்த்தையின் மச்சக் கன்னிதான்,
அதனைப் புன்னகைக்க மட்டுமே செய்யலாம்
பிடித்தால் நழுவி விடும்...
சமுத்திரத்தில் என்னைத் தேடுவது
என் நானிற்கு நிச்சயம் சாத்தியமேயில்லை,
அறையின் கதவை
இப்போது என்னால் திறக்கவும் முடியவில்லை
தனிமையும் இப்போது இங்கில்லை.
- மு.முகமது பாட்சா
No comments:
Post a Comment