Saturday, 29 July 2017

பச்சோந்தியழகி

No automatic alt text available.

அழகிய வனத்திற்குள் நுழைகின்றேன்... 
என் கவிதை 
மிகப் பெரிய வனத்தைத்தான் சமைத்திருந்தது, 
அங்குதான் அவளென்னை வரச் சொன்னாள், 
அவளை என் கவிதை பார்த்தது கிடையாதாம், 
அவளுக்கும் 
என் கவிதையை மட்டும்தான் தெரியுமாம், 
வழி காட்டி அழைத்துச் செல்லும் விசித்திரப் பறவை 
ஓவியன் வனத்திலிருந்து வந்திருக்கலாம், 
துருவிய 
நட்சத்திரக் குவியல்களின் உள்ளிருந்து வெளிப்பட்டாள், 
காட்டின் நிறம்  பூசியப் பேரழகி, 
அவள் புன்னகைத்த நொடியில் 
பூக்களெல்லாம் வனத்தை அலங்கரித்தன, 
தன் கையை என் பக்கம் நீட்டுகிறாள்... 
ஸ்பரிசத்தவன் பாசாங்கின்றி அவளிடம் நுழைகின்றேன் , 
நான் தீப் பற்றிக் கொள்ள 
அவளென்னை அணைக்கிறாள், 
குளிர்ந்து போகிறேன் 
உறைப் பனிக் கரடிகள் கடந்து போகின்றன, 
கவிதைகள் இலையுதிர்க்க 
வார்த்தைச் சந்தங்கள் இசை கூட்டுகின்றன 
அவள் நடனத்தில் லகரிகள் பொங்கி வழிகின்றன... 
ஓடமில்லாத நீச்சல்காரன் நீந்திக் களிக்கின்றேன், 
ஒருவரையொருவர் துவட்டிக் கொள்கின்றோம்... 
நட்சத்திரங்கள் உதிர்ந்து 
வனம் பச்சையம் பூசிக் கொள்கிறது... 
தொட்டெழுப்பிய சூரியனைத் தூரத்தில் வைத்து விட்டு 
பக்கத்தில் பார்க்கிறேன் 
பச்சோந்தி உடையைக் கழற்றி வைத்தவள் 
அடுத்தக் கவிதைக்காரனை தேடிப் போயிருந்தாள்.

- மு.முகமது பாட்சா

No comments:

Post a Comment

Popular Posts